Wednesday, 24 December 2014

அம்மா ....

பொய் சொல்ல மாட்டார்
என் அம்மா
என்ற
பொய்யை காப்பாற்ற
மீண்டும் ....
உண்மை சொல்லப் பழகுகிறேன்.

எல்லாம் தெரிந்தவர்
என் அம்மா
என்ற
நம்பிக்கையை காப்பாற்ற
மீண்டும் ....
விரிக்க ஆரம்பிக்கிறேன்
கண்களோடு
காதுகளையும் ....

இடி,மின்னல்
அதிர்வின் நடுக்கத்தில்
இறுக்கி அணைத்து,
என் பயத்தை
ஒளித்துவைக்கப்பழகுகிறேன்.

இப்படியாக.....
சுற்றத்தின்
இறுக்கத்தில்
சுருங்கிப்போன சிறகுகளை
மெல்ல..மெல்ல...
மீட்டுத்தந்தாள்
என் மகளாய் பிறந்த
என்
அம்மா ....

Sunday, 14 December 2014

எழுத்து

கண்ணுக்கு வெளியே
உள்ள
கனவுகள் கட்டளையிட்டுக்கொண்டிருக்க..
மனதுக்குள்ளே
மரணிக்கப்பட்ட
கனவுகள்  என்னுடையவை.

வானுக்கும்
வெளிக்கும்
இடையே சில

அந்தரத்தில்
திரிசங்குவை தேடிக்கொண்டு ...

பணம் மட்டுமே
வெளிச்சம்
பாய்சசுவதால்
பிணம்போல் பலர்
பிழைத்துக்கிடக்கின்றனர்.

வாழும்போது
வாழ்க்கையை விரட்டி ...
வீழூம்போது
?
மட்டுமே
கேலி செய்து நிற்கிறது.

என்ன செய்ய...
எழுத்தாணி எழுந்து நிற்கிறது .
தலை(எழுத்து)
என்னவோ
ஆணிக்கடியே சிக்கிய
தவளை போல...

ர்........

உணவுக்கும்
உணர்வுக்கும்
இடையில் சிக்கிக்கொண்ட
"ர் "
சிறிதாகிக் கொண்டே...

எனக்கும்
என்னுடையதற்கும்
இடையே
ஓர்
மெல்லிய கோடு
தடித்துக்கொண்டே...