Friday, 29 January 2016

சிட்டுக்குருவியின் தந்தை

உறங்கத்தயாராகும்
சிட்டுக்குருவியின்
கால்களுக்கு
அமைதி தந்த
பப்பாளிமரத்தின்
கால்களை
அருவருக்கச்செய்கிறது
கம்பளிப்பூச்சிக்கூட்டம்

சிட்டுக்குருவியின்
உறக்கம் கலையாதிருக்க
அடிமரத்தில்
தீ மூட்டல்.

வேரில் பரவும்
தீச்சூட்டை
மண்ணுக்குள் கடத்த இயலா
மரம்
அறிவிக்கவில்லை

தானும்
ஓர் தந்தையென்று.

Tuesday, 26 January 2016

மதில் மேலொரு பூனை -------------------------------------




நான்கு கால் பூனையின்
ஐந்தாவது
கால் அச்சையும்
மறைக்கப்பூசிய
சுண்ணாம்பால்
மறைக்கவே முடியவில்லை.

என் மகளின்
ஒற்றைக்கால் அச்சு.

Sunday, 24 January 2016

துளித்துளியாய் காதல்..

மரம் உதிர்த்த
மழைத்துளியில்
எழுந்திட்ட காதலை
எந்த குடை கொண்டு
தடுக்க.

*****************

எதிரெதிர்ப் படுகையில்
உரசிக்கொள்ளும்
பார்வையில்
உணர முடியாக் காதலை

வயிற்றுக்குள் எழும்
உருவமில்லா பந்து
ஒரு நொடியில்
உணர்த்திவிட்டுப் போகிறது.

******"*"***********

பெருமழைக்குப் பின்னதான
இரவாய்
தனித்து இருக்கிறேன்.
மெல்லிய
நடுக்கமெழுப்பும் காற்றைப்போன்ற
உன் காதலை
எதிர்நோக்கி...

*******************

மௌனத்தில் மொழிந்த
காதல்
தரைதட்டிய கப்பலைப்போல்
கரையும் ஏறாது.
கடலும் சேராது.

*****************

உனக்கும்
எனக்கும்
இடையேயான காதலுக்கிடையேயும்
காதல் மட்டுமே
இருந்தது....
தடையாய்.

***************

எது யாருக்கென்று
படைக்கப்படுகிறதோ
அது
தடைபடும்போது
மௌனம்
வலி கொள்கிறது.
வழியைக் கொன்று.

****************

எளிய காதல்கவிதைகள்
பிரசுரமாவதில்லை
என்றபோதும்
பிரசவிக்கப்பட்ட தருணங்கள்
வலியுடை மகிழ்வே!

***************

காலங்கடந்த ஞானம்
மட்டுமல்ல
காலங்கடந்த காதலும்
வலிக்கவே
செய்கிறது.

***************
மூழ்கிக் கொண்டிருக்கும்
சுவாசக்காற்று.
பிணங்களை
மிதக்கவிட்டு..
**********

Sunday, 10 January 2016

கழுதைகள் மறுக்கப்பட்ட வீதிகள்





கழுதைகள் மேய்ந்த வீதியில்
கைக்குழந்தைகள்
பயமின்றி நடைபழகின.

இன்னார் குழந்தையும்
அன்னாரது பெயரனும்
அறிந்தவர்களாய் இருந்தனர்.

கண்ணாமூச்சியும்
நொண்டியாட்டமும்
கலந்து கிடந்தன.

அறுத்து வீசப்பட்ட
எலுமிச்சைகள் பயமுறுத்தப்பட்டதைக்காட்டிலும்
நல்லவையாயிருந்தன.

கழுதைகளை மறுத்துவிட்ட
வீதிகளில்
கதவுகள் எப்பொழுதும்
அடைக்கப்பட்டிருந்தன.

வீதிகள்
சாலைகளாக்கப்பட்டிருந்தன.

தோளில் கைபோட்டு
நடை பயில
தோள்கள் வளரவில்லை.
கைகளும் நீளவில்லை.

அழகான சாலைகளாய்
இருந்தபோதும்
அச்சம் விளைவிப்பவையாகவே
இருக்கின்றன.

ஆம் தானே நண்பா?

Thursday, 7 January 2016

மனம் (எ) நான்
திடீரென்று
விழித்துக்கொண்டிருக்கிறது.
இல்லை
கவனித்துக்கொண்டிருக்கிறது.
ம்.
இல்லையில்லை.
வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது.
எதையும்
எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டிருக்கிறது.
பார்த்துக்கொண்டு மட்டும்.....

ஊழிக்கு முன்னான
                            முரண்களையும்
                பின்னான
                       அரண்களையும்.


மரணம்...

மரணம் நேசிக்கப்படுகிறது.
முதிர்கையில்...
மரணம் யாசிக்கப்படுகிறது.
இழப்புகளில்...
மரணம் தூசிக்கப்படுகிறது
பறிக்கையில்...
மரணம் வாசிக்கப்படுகிறது
படுக்கையில்..
மரணம் பூசிக்கப்படுகிறது
அதர்மம் அழிவுறுகையில்...
மரணம் சுவாசிக்கப்படுகிறது
போர்க்களத்தில்..
மரணம் முடிவாகவே இருக்கிறது
பெண் களத்தில்...
எனினும்
மரணம் மட்டும்
மரணிப்பதே இல்லை...