கழுதைகள் மேய்ந்த வீதியில்
கைக்குழந்தைகள்
பயமின்றி நடைபழகின.
இன்னார் குழந்தையும்
அன்னாரது பெயரனும்
அறிந்தவர்களாய் இருந்தனர்.
கண்ணாமூச்சியும்
நொண்டியாட்டமும்
கலந்து கிடந்தன.
அறுத்து வீசப்பட்ட
எலுமிச்சைகள் பயமுறுத்தப்பட்டதைக்காட்டிலும்
நல்லவையாயிருந்தன.
கழுதைகளை மறுத்துவிட்ட
வீதிகளில்
கதவுகள் எப்பொழுதும்
அடைக்கப்பட்டிருந்தன.
வீதிகள்
சாலைகளாக்கப்பட்டிருந்தன.
தோளில் கைபோட்டு
நடை பயில
தோள்கள் வளரவில்லை.
கைகளும் நீளவில்லை.
அழகான சாலைகளாய்
இருந்தபோதும்
அச்சம் விளைவிப்பவையாகவே
இருக்கின்றன.
ஆம் தானே நண்பா?

No comments:
Post a Comment