Sunday, 24 January 2016

துளித்துளியாய் காதல்..

மரம் உதிர்த்த
மழைத்துளியில்
எழுந்திட்ட காதலை
எந்த குடை கொண்டு
தடுக்க.

*****************

எதிரெதிர்ப் படுகையில்
உரசிக்கொள்ளும்
பார்வையில்
உணர முடியாக் காதலை

வயிற்றுக்குள் எழும்
உருவமில்லா பந்து
ஒரு நொடியில்
உணர்த்திவிட்டுப் போகிறது.

******"*"***********

பெருமழைக்குப் பின்னதான
இரவாய்
தனித்து இருக்கிறேன்.
மெல்லிய
நடுக்கமெழுப்பும் காற்றைப்போன்ற
உன் காதலை
எதிர்நோக்கி...

*******************

மௌனத்தில் மொழிந்த
காதல்
தரைதட்டிய கப்பலைப்போல்
கரையும் ஏறாது.
கடலும் சேராது.

*****************

உனக்கும்
எனக்கும்
இடையேயான காதலுக்கிடையேயும்
காதல் மட்டுமே
இருந்தது....
தடையாய்.

***************

எது யாருக்கென்று
படைக்கப்படுகிறதோ
அது
தடைபடும்போது
மௌனம்
வலி கொள்கிறது.
வழியைக் கொன்று.

****************

எளிய காதல்கவிதைகள்
பிரசுரமாவதில்லை
என்றபோதும்
பிரசவிக்கப்பட்ட தருணங்கள்
வலியுடை மகிழ்வே!

***************

காலங்கடந்த ஞானம்
மட்டுமல்ல
காலங்கடந்த காதலும்
வலிக்கவே
செய்கிறது.

***************
மூழ்கிக் கொண்டிருக்கும்
சுவாசக்காற்று.
பிணங்களை
மிதக்கவிட்டு..
**********

No comments:

Post a Comment