Saturday, 27 June 2015

மௌனம் நல்லது
மௌனமே நல்லது
மௌனமாய் இருத்தல் நல்லது
மௌனமாக இருத்தல் மட்டுமே நல்லது

நீயும்
நானும்
சந்திக்காத பொழுதுகள்.
இரவை சூடிக் கொண்டாள்
அவள்
அவளையே சூடிக்கொண்டான்
அவன்.
உன்னுடைய தொடுகையும்
என்னுடைய தொடுகையும்
அந்நியமாகின்ற
தருணம்.....

நீயும்
நானும்

நாமாய்
இல்லாதிருத்தலே..

Saturday, 13 June 2015

மௌனத்தின் இருப்பு

பேசியதும்
பேசாததும்

மௌனம்

உனக்காக நானும்
எனக்காக நீயும்
.......

விரலிடை நீர்போல்
என் காதல்.

நழுவிக்கொண்டே இருந்தது
நான்
பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

மௌனம்.....

பார்வைகளிடையே பரிமாறிக் கொண்டிருந்தது
பாஷைகளை
மறந்து விட்டு.

மௌனம்......

சுற்றத்தில் தொலைந்து போயிருந்ததுவும்
குற்றத்தை தொலைத்துப்போனதும்

மௌனம்.....


மௌனம் குற்றமா?
மௌனமே குற்றமா?
மௌனமும் குற்றமா?

மௌனம்...
குற்றம்....

குற்றம்......
மௌனம்.

அந்த இரவு...

இரவைப் போல்
அத்தனை சுகமாய்
இருக்கவில்லை இந்தப்பகல்.

இமைக்கத் தேவையற்ற
இந்த இரவில்
எந்தப் பொய்களும்
தேவைப்படவில்லை.

நிஜத்திற்கும்
நினைப்பிற்கும் இடையே
எந்த வர்ணமும்
பூச வேண்டியிருக்க வில்லை.

கண்களைத் துண்டித்த
பகலால்
இரவுக்குள் இழைந்து இழைந்து
எழுதிய
கனவுகளைக்கூட
'கரு'த்தடை
செய்ய இயலவில்லை.

வெளிச்சக்காட்டில்
விரட்டி விரட்டி துரத்திய
பகலால்
இரவின் இருளுக்குள்
எனது இராஜ்யத்தை இனம் கண்டு கொள்ளக்கூட முடியவில்லை.

சிதறிப்போன இலட்சியங்களைக்கூட
சேர்த்துருக்கொள்ள விரட்டும்
பகலினால்
நிறைவுறா நினைவு சுமக்கும்
இரவுக்கோட்டைக்குள்
நுழைவது அத்தனை எளிதா  என்ன?

சுற்றத்தின் குற்றம் சுமக்கும்
இந்தப்பகல்
அத்தனை சுகமாய்
இருக்க வில்லை
அந்த
இரவைப்போல்.....
இரவின் தூக்கத்தில்
தொலைந்துவிட்ட...

என் பேனா மையால்
எழுதப்படாத
ஆகச்சிறந்த கவிதையொன்று
தவித்துக் கிடக்கிறது.

முன்னிரவின்
நிழலுக்குள்ளிருந்த படி...