Saturday, 13 June 2015

அந்த இரவு...

இரவைப் போல்
அத்தனை சுகமாய்
இருக்கவில்லை இந்தப்பகல்.

இமைக்கத் தேவையற்ற
இந்த இரவில்
எந்தப் பொய்களும்
தேவைப்படவில்லை.

நிஜத்திற்கும்
நினைப்பிற்கும் இடையே
எந்த வர்ணமும்
பூச வேண்டியிருக்க வில்லை.

கண்களைத் துண்டித்த
பகலால்
இரவுக்குள் இழைந்து இழைந்து
எழுதிய
கனவுகளைக்கூட
'கரு'த்தடை
செய்ய இயலவில்லை.

வெளிச்சக்காட்டில்
விரட்டி விரட்டி துரத்திய
பகலால்
இரவின் இருளுக்குள்
எனது இராஜ்யத்தை இனம் கண்டு கொள்ளக்கூட முடியவில்லை.

சிதறிப்போன இலட்சியங்களைக்கூட
சேர்த்துருக்கொள்ள விரட்டும்
பகலினால்
நிறைவுறா நினைவு சுமக்கும்
இரவுக்கோட்டைக்குள்
நுழைவது அத்தனை எளிதா  என்ன?

சுற்றத்தின் குற்றம் சுமக்கும்
இந்தப்பகல்
அத்தனை சுகமாய்
இருக்க வில்லை
அந்த
இரவைப்போல்.....

No comments:

Post a Comment