Monday, 31 August 2015

பு(பொ)து விலாசம்

தெருவிளக்குக்கு எட்டாத தூரத்திலிருந்து
தேடல் ஊர்வலம்
நகர்வலம்
ஆரம்பித்தாயிற்று.

ஊருக்கொன்று
என்றிருந்தபோது
கைப்பற்றிவிட்டோம்.
தெருவிற்கிரண்டு என்றானதால்
தெருத்தெருவாய்.....

மதுவால் மதிமயங்குபவர்க்கு
                                             எல்லாம்
மதுக்கடைதானே
பொதுவிலாசமாய்.

தீர்த்தமாடிய தீர்த்தங்கரர்கள்
தேவதைகளுடன்
குடும்பம் நடத்தத் தொடங்கினர்
நடைபாதைச் சாலையில்.

வரிவரம்பு எட்டாதோர்
முழுவருமானமும்
அரசாங்கக் கஜானாவிற்கு.
அன்றைய வசூல்
அன்றன்றே!

கையிருப்பும்
மெய்யிருப்பும்
கரைந்திட
நான்கிரண்டு மாத
நடைபயில்கின்றனர்.

தேடித் தேடி
நிதம் சோர்வதோ

மதுவால்
மனம் பிறழ்ந்த
மாக்களைத் தேடும்
மாதுக்களே!!!!!


Thursday, 27 August 2015



மாயக்கண்ணா(டி) நீ!!
--------------------------

பாரதத்து மாயக்கண்ணன்
இராமனாய்
காலத்தின் மாயைகளுக்குள்..
தானே .....

நினைவிலும்
ஒருத்தியோடே இருந்தான்
ஆயிரம் மனையாளுடையான் மகன்.


கோபியர்க்கண்ணன்
காதலில் களித்திருந்தான்
கோதை ராமனோ
கானகத்திலும் தனித்திருந்தான்
தவித்திருந்தான்.


பாகுபலி என
உயிர் மீண்டவன்
பாரதம் படைத்தான்.

சகுனியின் சதிராட்டத்தில்
ஒதுங்கி நின்றான்.
பாஞ்சாலியின் மானத்துக்கு
காவல் வந்தான்.

வாலியின் வாழ்வுக்கோ
தடை போட்டான்.
வால்மீகியின் வாழ்க்கையை
மாற்றிப் போட்டான்.

காலத்தை தனக்குள்
வைத்துக்கொண்டே
காட்சிப் பொருளானான்.
நம்மை
கண்ணாடியாக்கி விட்டுவிட்டு.



தூறலிடும்
சாரலுக்குள்
காதல் ஒளி செலுத்தி
வர்ணமாலையிட்டது
வான்.

சாரல் மழையை
தாவியணைத்து
தன் காமம் தீர
புணர்ந்தது
பூமி.

Sunday, 23 August 2015

ஊனமும் நாணமும்

ஊனமென்ற சொல்
காயமுறும் பொழுதெல்லாம்
பெயர் மாற்றுருக் கொள்கிறது.

மாற்றுத்திறனாளி களெனும் போதும்
மாற்றமொன்றும் எழவில்லை
மனங்களில்.

காத்திருத்தலின் வலிகள்
மலைத்துப் போகின்றன.
காயமுறும் பொழுதுகளில்.

தன்னம்பிக்கை கதை
சொல்லும் மாற்றுத்திறனாளிகளை
கவனிப்பதென்னவோ
மாற்றமில்லாதவர்கள்தான்

இவர்களின் அங்க அடையாளங்கள்
எல்லோருக்கும்
தெளிவாக.
மனமெங்கும் இழிவாக.

ஊனமறுத்து உயரேகும் போதும்
நாணமுறச்செய்யும்
நாணமற்றவர்களால்

நாணமுற்றுப் போகின்றன சில
ஊனங்கள்
ஊன் மட்டும் கொண்டவையாய்.

முந்தானைகளின் கதை..

தோசை மாவின்
வாசத்தோடே
தலை துவட்டிப் போனது.

மழை ஈரம் நனைத்துமே
நனைக்கவில்லை
என்னை.
ஓர் முந்தானை.

இரவின் உறக்கம்
தொலைக்க
தொலைந்து போனதொரு முந்தானை.

காற்றை உறிஞ்சி
காதலாய் செலவு செய்ததும்
ஓர் முந்தானை.


கனவுகளில் பறக்க
இறகுகளாய் வந்ததும்

இறகுகளை
சிறகுகளாய் மாற்றியதும்
ஓர் முந்தானை.


காதலை கவிதையாய்
பெற
உதிரம் சிந்தியதும்

உதிரத்தை உடனே
உலர்த்தியதும்
ஓர் முந்தானை.

உலகு உதறி
உயரே பறந்த போதும்
உடன் வர இயலாது
தவித்து துடித்தவைகளும்

சில முந்தானைகள்.

மானம் மறைத்து
மனதையும்.....
கண்ணீரை துடைத்து,
வெட்கம் ஒளித்து,
வேதனை வெளியேற்றி,
பசிகளை போக்கி,
ருசிகளை படைத்து,

நைந்து கொண்டிருந்த
எல்லாவற்றிலும்
விரவிக் கிடந்த தென்னவோ
தாய்மையின் வாசம்தான்.

Monday, 17 August 2015

பறக்கவியலா சருகுகள் -- சாதி




சபை நாகரீகம்
கருதி
சலங்கைகள் கட்டவிழும்.

சற்றே நகர்ந்ததும்
மௌனமும் கட்டவிழும்.

கை கலந்து
கண் கலந்து
மொழிகளுக்குள் பேதமுணரும்.


தூரே செலுத்தி
துகிலுரிக்கும்.

மேடை தோறும் சிதறிப்போகும்.
மேடை பின்னே
கொதித்துப் பெருகும்.

இரவுகளில் அம்மணமாக்கப் பட்டு
பகலில் பட்டுடுத்தி நிற்கும்.

உயிரும் மெய்யும்
உரைத்து
உணர்வெழுப்பும்.

உடையவர் சேர்ந்து விட்டால்
உரிமைக் கொடி ஏந்தும்.

எரியூட்டும் நேரம் மட்டுமே
எழுந்தோடும்.

கூட்டியும் அள்ளியும்
முடியவில்லை.

ஈரெழுத்தில்
எண்ணவியலா உயிர்கொல்லும்
இந்த
பறக்கவியலா சருகுகளை.


நன்றி

ஆனந்த விகடன் 02.09.15

Saturday, 15 August 2015

(வாழும் வகையறியா) ஊரின் கடைவழி...

ஊரின் கடைவழி
ஓர் ஆறு இருக்கிறது.
அகலமாக அல்ல
ஒல்லியாகவும் அல்ல.

ஊர்க்கறை வெளுக்கையில்
உளறப்பட்ட
ஊர்க்கதைகளை சுமந்து
சேர்த்து...

மரணத்தின் வழி தேடி
வந்தோரை
மடியில் தாங்கி..

கரையோர மணலில்
தன்  பங்கையும்
எடுத்துக் கொண்டு....

காத(லை)லில் கழித்திருந்த
வாலிபங்களையும்
வளைத்துக் கொண்டு....

கலவி கொண்ட
மீன்களோடும்........

ஓர் ஆறு
இருக்கிறது.

ஊர்க்கதைகள் உளற
யாருமற்று...

கலவி கொள்ள
மீன்களற்று..

மணலை மட்டுமே
மடி நிறைய
சுமந்து கொண்டு...

மரணத்தின் வழிதன்னில்....

ஓர் ஆறு இருக்கிறது.

ஒவ்வொரு
ஊரிலும்....