Sunday, 23 August 2015

முந்தானைகளின் கதை..

தோசை மாவின்
வாசத்தோடே
தலை துவட்டிப் போனது.

மழை ஈரம் நனைத்துமே
நனைக்கவில்லை
என்னை.
ஓர் முந்தானை.

இரவின் உறக்கம்
தொலைக்க
தொலைந்து போனதொரு முந்தானை.

காற்றை உறிஞ்சி
காதலாய் செலவு செய்ததும்
ஓர் முந்தானை.


கனவுகளில் பறக்க
இறகுகளாய் வந்ததும்

இறகுகளை
சிறகுகளாய் மாற்றியதும்
ஓர் முந்தானை.


காதலை கவிதையாய்
பெற
உதிரம் சிந்தியதும்

உதிரத்தை உடனே
உலர்த்தியதும்
ஓர் முந்தானை.

உலகு உதறி
உயரே பறந்த போதும்
உடன் வர இயலாது
தவித்து துடித்தவைகளும்

சில முந்தானைகள்.

மானம் மறைத்து
மனதையும்.....
கண்ணீரை துடைத்து,
வெட்கம் ஒளித்து,
வேதனை வெளியேற்றி,
பசிகளை போக்கி,
ருசிகளை படைத்து,

நைந்து கொண்டிருந்த
எல்லாவற்றிலும்
விரவிக் கிடந்த தென்னவோ
தாய்மையின் வாசம்தான்.

No comments:

Post a Comment