Sunday, 6 September 2015

அதுவும் இதுவும்




அங்கும்
இங்கும்
அலையாடிக் கொண்டிருந்தது.
மை பூசிய விழியிரண்டில்
மழலை சிதற.

எச்சில் சிதற சிதற
எழுத்துக்களை
பாடிக்கொண்டு...

துணைக்கு என்றோ
தொல்லை தீரட்டுமென்றோ
சும்மாகவேனும்
இருக்கட்டுமென்றோ
அம்மா வாங்கித்தந்தாள்
ஒரு பொம்மை.

அது
எப்போதும்
சிரித்துக் கொண்டேயிருந்தது.

மழலையும் மகிழ்ந்து இருந்தது

விளையாடியது
சண்டையிட்டது
கை கோர்த்துக்கொண்டது.

அது
சிரித்துக்கொண்டே இருந்தது.

திட்டிப் பார்த்தது
அடித்து பார்த்தது.

அது
சிரித்துக் கொண்டே
 இருந்தது.

அழுது பார்த்தது
அரற்றி பார்த்தது
மிரட்டி பார்த்தது

கொஞ்சியும் பார்த்தது.

அது
சிரித்துக் கொண்டே
 இருந்தது

எடுத்து
வீசி விட்டுப் போனது.

தலை துண்டுபட்டு
தரை வீழ்ந்தது பொம்மை.

அப்பவும்......

சிரித்துக் கொண்டே இருந்தது அது.

கடவுளைப் போல்.

பின்குறிப்பு:

அதுவும்
இதுவும்
நீயும்
நானும்
அல்ல.

No comments:

Post a Comment